நியூசிலாந்து அணியை 119 ஓட்ட வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து உலக கிண்ண அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
இருஅணிகளுக்கு இடையிலான 41வது லீக் போட்டி செஸ்டர்-லீ-ஸ்ட்ரீட்டில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.அதன்படி ஜேசன் ரோய், பேர்ஸ்டோவ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் தொடக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இங்கிலாந்து 123 ஓட்டங்களை பெற்றிருந்த போது ஜேசன் ரோய் 60 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டமிழந்தார். சிறப்பாக விளையாடிய பேர்ஸ்டோவ் சதம் அடித்து 106 ஓட்டங்களை எடுத்திருந்து நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கட்டுக்களை இழந்து 305 ஓட்டங்களை பெற்று கொண்டது.
306 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றியெனும் இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர் நிக்கோலஸ் ரோய் ஓட்டங்கள் எதுவும் பெறாமல் ஆட்டமிழந்தார். மார்டின் கப்டில் எட்டு ஓட்டங்களில் ஆட்டமிழக்க அணி பின்னர் களறமிங்கிய அணி தலைவர் வில்லியம்ஸன் 27 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய டொம் லாடம் அதிகபட்சமாக 57 ஓட்டங்களை பெற்றார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 45 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 186 ஓட்டங்களை பெற்று 119 ஓட்டங்களினால் தோல்வியை தழுவியது. இங்கிலாந்து சார்பில் மார்க் அதிகபட்சமாக 3 விக்கட்டுகளை வீழ்த்தினார்.நியூசிலாந்துக்கு ஏதிரான இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி உலக கிண்ண கிரிக்கட்டின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.
