போதைப்பொருள் மற்றும் மதுபான வர்த்தகத்துடன் தொடர்புடைய 2 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது. தேசிய போதைப்பொருள் ஒழிப்பு வார்த்தில் திணைக்களம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசேட சுற்றிவளைப்புக்களை முன்னெடுத்தது. நாடு முழுவதும் முன்னெடுத்த இச்சுற்றிவளைப்பில் கலால் திணைக்கள சட்டத்தை மீறி குற்றச்செயலில் ஈடுபட்ட சந்தேகநபர்களை கைதுசெய்துள்ளதாகவும் கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க தெரிவித்தார். கலால் மோசடி, புகைப்பொருள் வர்த்தக மோசடி, போதைப்பொருள் வர்த்தகம் ஆகியவற்றை மையப்படுத்தி குறித்த 2 ஆயிரம் பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதில் சட்டவிரோத மதுபான உற்பத்தி குற்றம் தொடர்பில் 50க்கும் அதிகமான சம்பவங்கள் பதிவாகின. அதேபோல் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து நாட்டில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையமொன்றும் இக்காலப்பகுதியில் சுற்றிவளைக்கப்பட்டதாக கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் குறிப்பிட்டார்.
அதேபோல் கலால் திணைக்கள அனுமதிப்பத்திர விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எதிராகவும் கலால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். நாடு முழுவதும் தொடர்ந்தும் இவ்வாறான சுற்றிவளைப்புக்கள் இடம்பெறுமென கலால் திணைக்கள பிரதி ஆணையாளர் கபில குமாரசிங்க மேலும் தெரிவித்தார்.