ஒடளதங்கள் மற்றும் மருத்துவ உபரகணங்கள் கொள்வனவின் போது இடம்பெறும் ஊழல் சுகாதார துறையில் நிலவும் பெரும் பிரச்சினையென ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். மனம்பிடியவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.
மனம்பிடிய கிராமிய ஆயுர்வேத வைத்தியசாலையின் நீண்டநாள் குறையை தீர்க்கும் வகையில் புதிய வோட் கட்டட தொகுதி ஜனாதிபதிமைத்ரிபால சிறிசேனவினால் நேற்றைய தினம் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. 165 இலட்சம் ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இக்கட்டடம் 28 கட்டில் வசதிகளை கொண்டதாகவும் வெளி நோயாளர் சிகிச்சை பிரிவை உள்ளடக்கியதாகவும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இவ்வைத்தியசாலையை திறந்து வைத்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அதன் கட்டமைப்புக்களையும் பார்வையிட்டார். தொடர்ந்து அங்கு உரையாற்றிய ஜனாதிபதி ஆயுர்வேதம் சுதேச வைத்தியதுறையின் மிகவும் முக்கியமானது என தெரிவித்தார்.
இதேவேளை வாழ்வாதார அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மக்களுக்கு பல்வேறு நிவாரணங்கள் ஜனாதிப்தியினால் வழங்கப்பட்டன. மீள் எழுச்சி பெறும் பொலன்னறுவை செயற்றிட்டத்தின் கீழ் இந்த நிவாரணங்கள் வழங்கப்பட்டன. அறநெறி பாடசாலைகள் மற்றும் முன்பள்ளிகளுக்கான மேசைகள், கதிரைகள் வழங்கப்பட்டதுடன், வறிய குடும்பங்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட 63 வீடுகள் பயனாளிகளுக்கு ஜனாதிபதியினால் கையளிக்கப்பட்டன. அத்துடன் சுற்றுலா வனப்புமிக்க பகுதிகளில் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுக்கு நடமாடும் விற்பனை கூடங்கள், படகுகள், மீன்பிடி உபகரணங்கள் என்பனவும் வழங்கப்பட்டன.