உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கு அடுத்த பாடசாலை தவணையிலிருந்து டெப் கணணிகள் வழங்கப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இவ்வாறு பாரிய செயற்திட்டமொன்றை தெற்காசியாவில் முன்னெடுத்த முதல் நாடு இலங்கையெனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். கல்வித்துறையை நவீன மயப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்காகும்.
கல்வி தகவல் தொழிநுட்ப யுகத்திற்குள் கொண்டு செல்லப்படும். கல்வித்துறையை நவீனமயப்படுத்த தவறினால் அது நாட்டிற்கு செய்யும் துரோகமாகும். முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்ன இலவச பாடநூல்களை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தார். கரும்பலகையிலிருந்து வெள்ளைப் பலகைக்கும் தற்போது ஸ்மார்ட் திரைக்கும் கல்வித்துறை முன்னேறியுள்ளது. தற்காலத்தில் கணணி அறிவு இன்றியமையாததாகும்.
தனியார் துறையில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கணணிசார் வேலைவாய்ப்புக்கள் காணப்படுகின்றன. இதற்கு தேவையானவர்கள் உருவாக்கப்பட வேண்டுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார். வடக்கு கிழக்கு மாகாணங்களிலும் ஆயிரத்து 900 தொண்டர் ஆசிரியர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.