உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் 24வது போட்டி இன்று மென்செஷ்டரில் நடைபெறவுள்ளது. பிற்பகல் 3 மணிக்கு ஆரம்பமாகவுள்ள இப்போட்டியில் இங்கிலாந்து அணி ஆப்கானிஸ்தானை எதிர்கொள்ளவுள்ளது. இதுவரை நடைபெற்று முடிந்த போட்டிகளின் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் தான் விளையாடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியடைந்து எவ்வித புள்ளிகளும் இல்லாத நிலையில் புள்ளிப்பட்டியலில் இறுதி இடத்திலுள்ளது. இங்கிலாந்து அணி இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி 3 இல் வெற்றிபெற்று 6 புள்ளிகளோடு நான்காம் இடத்திலுள்ளது. இந்நிலையிலேயே இவ்விரு அணிகளும் இன்று ஒன்றையொன்று எதிர்கொள்கின்றன.
இதேவேளை தொடரில் நேற்று நடைபெற்ற 23வது லீக் போட்டியில் பங்களாதேஷ் அணி மேற்கிந்திய தீவுகளை அபாரமாக வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்தாடியிருந்த மேற்கிந்திய தீவுகள் 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 321 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு 322 எனும் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய பங்களாதேஷ் ஆரம்பம் முதல் சிறப்பான துடுப்பாட்டத்தை வெளிப்படுத்தியது. தமிம் இக்பால் 48 ஓட்டங்களோடு ஆட்டமிழந்தார். சௌம்மியா சர்கார் 29 ஓட்டங்களோடும், முஷ்பிஹுர் ரஹீம் ஒரு ஓட்டத்தோடும் ஆட்டமிழந்தனர். பின்னர் நான்காவது விக்கெட்டுக்காக ஜோடி னேசர்ந்த சகிப் அல் ஹசன் மற்றும் லிட்டன் தாஸ் ஆகியோர் 189 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பகிர்ந்தனர். சகிப் அல் ஹசன் ஆட்டமிழக்காமல் 124 ஓட்டங்களையும் லிட்டன் தாஸ் ஆட்டமிழக்காமல் 94 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். அதற்கமைய 41.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து பங்களாதேஷ் அணி வெற்றி இலக்கை அடைந்தது. போட்டியின் ஆட்டநாயகனாக சகிப் அல் ஹசன் தெரிவானார். இம்முறை உலகக்கிண்ணத்தில் சகிப் அல் ஹசன் இரண்டாவது சதத்தை நேற்று பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.