ஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்களை ஏற்படுத்தும் தேசிய வேலைத்திட்டம் இன்று தெஹியத்தகண்டியவில் ஆரம்பமாகவுள்ளது. அமைச்சர் தயா கமகே தலைமையில் காலை 9.30க்கு கிராமத்தை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாயிகளின் ஆரம்ப உற்பத்திகளை ஏற்றுமதி சந்தைக்கு பொருந்தும் வகையில் பெறுமதி சேர்க்கும் ஒன்றிணைந்த வேலைத்திட்டத்தை மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
இரண்டு கட்டங்களாக குறித்த ஐயாயிரம் ஏற்றுமதி கிராமங்கள் நிர்மாணிக்கப்படும். கிராமங்களிலுள்ள வளங்களை அடிப்படையாக கொண்டு தேவையான உற்பத்திகளை தெரிவு செய்யும் செயற்பாடு இடம்பெறவுள்ளதாக அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை திட்டத்தின் முதற் கட்டத்தில் 300 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் ஆயிரம் ஏற்றுமதி கிராமங்கள் ஆரம்பிக்கப்படும். கிராமங்களை நிர்மாணிக்கும் வேலைத்திட்டத்தை 2020ம் ஆண்டளவில் நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.