தற்கொலை குண்டுதாரி சஹ்ரான் இஸ்லாமிய மார்க்கம் தொடர்பில் புதிய விடயங்களை முன்வைத்ததாக கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கடந்த 2010 ம் ஆண்டு முதல் சஹ்ரான் பொதுவெளியில் ஆன்மீக உரைகளை ஆற்ற ஆரம்பித்தார். அவரது முரண்பட்ட கொள்கை காரணமாக பல இயக்கங்களிலிருந்தும் வெளியேற்றப்பட்டார். இறுதியாக அவர் தேசிய தௌஹீத் ஜமாத் என்ற அமைப்பை நிறுவினார். சஹ்ரான் ஆன்மீக ரீதியாக கவர்ச்சிகரமாக உரையாற்றும் திறமைகொண்டவர். தர்க்கம் மற்றும் விவாதங்களையும் புரியக்கூடியவர். அவர் ஏனைய இயக்கங்களின் கொள்கையை பிழையென விமர்சிப்பவராகவே காணப்பட்டார். 2017 ம் ஆண்டு வரை சஹ்ரான் காத்தான்குடியிலேயே இருந்தார். அவர் சார்ந்த கொள்கை பிரசாரங்களை மேற்கொண்டார். 2017 ம் ஆண்டு ஊரை விட்டு சென்றதன் பின்னரே சஹ்ரான் பயங்கரவாத இயக்கங்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளார். ஐ.எஸ்.ஐ.எஸ் பயங்கரவாதிகள் முஸ்லிம்கள் அல்ல. அவர்களை தான் முற்றாக நிராகரிக்கின்றேன். ஐ.எஸ்.பயங்கரவாத்திற்கு எதிராக தான் பாராளுமன்றத்திலும் உரையாற்றியதாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா சாட்சியம் வழங்கும் போது குறிப்பிட்டார்.
இதேவேளை பாராளுமன்ற தெரிவுக்குழு உறுப்பினர். ஆசுமாரசிங்க மட்டக்களப்பு பல்கலைக்கழகம் தொடர்பில் ஹிஸ்புள்ளாவிடம் கேள்வி எழுப்பினார்.
கடந்த அரசாங்கம் பல்கலைக்கழக கல்லூரி என்ற புதிய திட்டமொன்றை அறிமுகப்படுத்தியது. டளஸ் அழகப்பெரும தொழிற்பயிற்சி மற்றும் திறன்காண் அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது அரசாங்கத்தின் சார்பாக பல்கலைக்கழக கல்லூரிகளை ஆரம்பித்தார். தனியார் பல்கலைக்கழக கல்லூரியை ஆரம்பிக்க அப்போதைய அமைச்சர் டளஸ் அழகப்பெருமவுடன் தான் ஒப்பந்தம் செய்ததாக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா குறிப்பிட்டார். 2013 ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 15 ம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதாகவும் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புள்ளா தெரிவித்தார்.