உலக கிண்ண கிரிக்கட் தொடரின் நேற்று இடம்பெற்ற 17 வது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா அணி 41 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணிக்கு எதிராக டவுண்டனில் போட்டி இடம்பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா அணி 49 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களை இழந்து 307 ஓட்டங்களை பெற்றது. டேவிட் வோர்னர் 107 ஓட்டங்களையும், அணித்தலைவர் அரோன் பின்ச் 82 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் மொஹமட் அமீர் 5 விக்கட்டுக்களையும், ஷஹின் அப்ரிடி 2 விக்கட்டுக்களையும் கைப்பற்றினர்.
308 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 45.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 266 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இமாமுல் ஹக் 53 ஓட்டங்களையும் மொஹமட் ஹபீஸ் 46 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர். பந்துவீச்சில் பெட்கெமின்ஸ் 3 விக்கெட்டுக்களையும் ஸ்டாக் மற்றம் ரிச்சட்சேன் ஆகியோர் தலா இருவிக்கெட்டுக்களையும் கைப்பற்றினர். போட்டியின் ஆட்டநாயகனாக டேவிட் வோர்ணர் தெரிவானார்.
இதேவேளை இன்று நடைபெறும் உலக கிண்ண போட்டியில் நியூசிலாந்தும் இந்தியாவும் மோதவுள்ளன. இலங்கை நேரப்படி இன்று 3 மணிக்கு இப்போட்டி ஆரம்பமாகும். கடந்த 9 ஆம் திகதி அவுஸ்திரேலியாவுடன் இடம்பெற்ற போட்டியில் உபாதைக்குள்ளான சிக்கர் தவான் இன்றைய போட்டியில் பங்குபற்ற மாட்டார் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவருக்கு பதிலாக ரிஷப் பன்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.