வெல்லம்பிட்டிய செப்பு தொழிற்சாலை ஊழியர்களின் 10 வது சந்தேக நபரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த இச் செப்பு தொழிற்சாலையின் 9 ஊழியர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இவர்களின் வாக்கு மூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக வெல்லம்பிட்டிய பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். தொடர்ந்தும் விசாரணை இடம்பெறுவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
குறித்த செப்பு தொழிற்சாலையின் உரிமையாளரான தற்கொலை குண்டுதாரியுடன் இச்சந்தேக நபர்கள் தொடர்புகளை பேணி வந்துள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குற்றத்துடன் இவர்களுக்கு தொடர்புள்ளதாக என்பது தொடர்பில் மேலும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் அறிவித்தனர். ஷெங்ரில்லா ஹோட்டலில் தற்கொலை குண்டு தாக்குதலை மேற்கொண்ட இன்சான் இப்ராஹிமிற்கு சொந்தமான செப்பு தொழிற்சாலையில் குறித்த சந்தேக நபர்கள் பணிபுரிந்துள்ளனர்.