இலங்கைக்கு தேவையான எந்தவொரு உதவியையும் வழங்க தயார் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இன்று முற்பகல் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி 2வது தடவையாக பதவியேற்கும் விழாவில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கலந்து கொண்டதுடன், இன்று ஹைதரபாத்தில் ஜனாதிபதிக்கும் இந்திய பிரதமருக்கும் இடையில்ட சந்திப்பு இடம்பெற்றது. ஹைதராபாத்தில் உள்ள இந்திய பிரதமரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்திற்கு சென்ற ஜனாதிபதியை நட்புடனும் அன்புடனும் இந்திய பிரதமர் வரவேற்றார். அதனை தொடர்ந்து இருநாட்டு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டதுடன், தனது அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவில் பங்குபற்றியமைக்காக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கு இந்திய பிரதமர் தனது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.
அண்மையில் இலங்கையில் ஏற்பட்ட துயரமான சம்பவம் தொடர்பில் தனது கவலையை தெரிவித்த இந்திய பிரதமர் அமைதி மற்றும் அபிவிருத்தி தொடர்பில் இருநாடுகளுக்கு இடையில் நிலவும் இருத்தரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது தொடர்பிலும் உரையாடினர். பயங்கரவாதத்தை ஒழிப்பது தொடர்பிலும் பிராந்தியத்தில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்காக இணைந்து செயலாற்றுவது தொடர்பிலும் இரு தலைவர்களும் உறுதிபூண்டனர்.
பிரதமர் நரேந்திர மோடி இம்முறை இடம்பெற்ற லோக் சபா தேர்தலில் அரிதி பெரும்பான்மை பெற்று இரண்டாவது தடவையாகவும் இந்திய பிரதமராக பதவியேற்றமைக்கு ஜனாதிபதி தனது மகிழ்ச்சியை தெரிவித்தார்.