அகதிகளாக தங்களை அடையாளப்படுத்தி கடல்மார்க்கமாக அவுஸ்திரேலியா செல்ல முயற்சித்த இலங்கையர்கள் சிலர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர். இம்மாதத்தின் முதல் வாரத்தில் இவர்கள் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
20 பேர் அடங்கிய குறித்த குழுவினர் கிறிஸ்மஸ் தீவில் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதன் பின்னர் அவுஸ்திரேலிய அதிகாரிகளால் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கு அகதிகள் என்ற ரீதியில் அவுஸ்திரேலிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்க எவ்வித தகைமையும் இல்லையென அவுஸ்திரேலிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை கடந்த 2013 ம் ஆண்டு முதல் இதுவரை இவ்வாறு சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற 186 பேர் நாடுகடத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.