நாத்தான்டிய கொட்டாரமுல்ல பகுதியில் ஏற்பட்ட குழப்ப நிலையை தொடர்ந்து கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 31 சந்தேகநபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர்.
இச்சந்தேகநபர்கள் மாரவில மாவட்ட நீதிபதியும் பிரதான மஜிஸ்திரேட்டுமான சிரிமெவன் மகேந்திர ராஜா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டமையை தொடர்ந்தே இவர்களுக்கு பிணை வழங்கப்பட்டது.
கடந்த 13ம் திகதி கொட்டாரமுல்ல பகுதியில் இடம்பெற்ற குழப்பங்களின் போது ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்தார். இச்சம்பவம் தொடர்பாகவே சந்தேகநபர்கள் 31 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். சந்தேகநபர்கள் அனைவரையும் 5000 ரூபா சரீர பிணையில் செல்ல மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.