சைபர் தாக்குதல்களிலிருந்து தவிர்த்துக்கொள்ள புதிய சட்டங்களை அமுல்ப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். சைபர் பாதுகாப்பு சட்டம் மற்றும் தகவல் பாதுகாப்பு சட்டத்தை அறிமுகப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பொதுமக்களிடம் கருத்து கோரும் நடவடிக்கை எதிர்வரும் 6ம் திகதி முதல் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் சைபர் பாதுகாப்பு தொடர்பான சட்டமூலம் அமைச்சரவை அனுமதிக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்தார். இதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியவுடன், அதனை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்போம். அதற்கிடைப்பட்ட காலத்தில் இந்த சட்டமூலம் தொடர்பில் மக்களுக்கு தெளிவுப்படுத்தும் நடவடிக்கை இடம்பெறும் அதன் ஒரு கட்டமாக ஜுன் 6ம் திகதி பொதுமக்களின் கருத்துக்களை பெறும் விசேட நிகழ்வொன்று இடம்பெறவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா சுட்டிக்காட்டினார்.
தற்போது இந்த சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் இணையத்தளம் மற்றும் இலங்கை சேட் நிறுவனத்தின் இணையத்தளம் ஆகியவற்றில் பதிவேற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இதற்கு பொதுமக்கள் எழுத்துமூலம் தமது ஆலோசனைகளை வழங்க முடியுமென இராஜாங்க அமைச்சர் அஜித் பி பெரேரா மேலும் குறிப்பிட்டுள்ளார்.