ஐசீசீ உலக கிண்ணத்தொடர் எதிர்வரும் 30ம் திகதி இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் உலக கிண்ண போட்டிகளில் விளையாடவுள்ள இறுதி அணி விபரத்தை இங்கிலாந்து அறிவித்துள்ளது.
உலக கிண்ண போட்டிகளுக்கான முதற்கட்ட அணி விபரத்தை கடந்த மாதம் 20ம் திகதிக்குள் அறிவிக்கவேண்டுமென ஐசீசீ அறிவித்திருந்தது. எனினும் மே மாதம் 23ம் திகதி வரை தேவையேற்படின் அணியில் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ளலாமென ஐசீசீ அறிவித்திருந்தது.
அதற்கமைய நேற்று முன்தினம் பாகிஸ்தான் உலக கிண்ண போட்டிகளுக்கான தமது அணியில் மூன்று மாற்றங்களை மேற்கொண்டது.
இந்நிலையில் நேற்றைய தினம் இங்கிலாந்து அணியும் இரு வீரர்களுக்கு அணியில் இடம் வழங்கி 15 பேர் கொண்ட இறுதி அணி விபரத்தை அறிவித்தது. இவ்வணியில் ஜொப்ரா ஆர்ச்சர் மற்றும் லியம் டௌசர் ஆகியோர் புதிதாக இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தான் அணிக்கெதிரான தொடரில் இடம்பிடித்திருந்த ஆர்ச்சருக்கு இங்கிலாந்து உலக கிண்ணத்தில் வாய்ப்பளித்துள்ளது. இதற்கமைய முதற்கட்டமாக அறிவிக்கப்பட்ட இங்கிலாந்து அணியில் இடம்பிடித்திருந்த எலக்ஸ் ஹோல்ஸ் மற்றும் ஜோ டென்லி ஆகியோர் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக இங்கிலாந்து கிரிக்கெட் தெரிவுக்குழு அறிவித்துள்ளது.
உலக கிண்ணத்தின் முதற்போட்டி எதிர்வரும் 30ம் திகதி இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையில் லண்டனில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.