கடந்த சில தினங்களாக இடம்பெற்ற மோதல் சம்பவங்களுடன் தொடர்புடைய 60க்கும் அதிகமானோர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் இதுவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்படுகின்றவர்களுக்கு 10 வருடகால சிறைத்தண்டனை வழங்கமுடியுமென பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.
மேலும் குறித்த கலவர சம்பவங்களில் ஈடுபடுகின்ற நபர்களுக்கு பொலிஸ் சான்றிதழ் வழங்கும் போது அவர்களின் இத்தகையான சட்டவிரோத செயற்பாடுகள் குறித்து அதில் குறிப்பிடப்படுமெனவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை சட்டவிரோத செயற்பாடுகளை கட்டுப்படுத்த விமானப்படையினர் ஹெலிகொப்டர்களை பயன்படுத்த தீர்மானித்துள்ளனர். கலகத்தில் ஈடுபடும் நபர்களை வான்பரப்பிலிருந்து புகைப்படமெடுத்து அதனை சாட்சியாக கொண்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென விமானப்படை ஊடகப்பேச்சாளர் குரூப் கெப்டன் கிகான் செனவிரத்ன தெரிவித்தார்.