உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதல்களினால் சேதமடைந்த தேவாலயங்களை புனரமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் ஆலோசனைக்கமைய குறித்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார். இதற்கான அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய மட்டக்களப்பு சியோன் தேவாலயத்திற்கு முதற்கட்டமாக 5 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பு- கட்டுவாப்பிட்டிய தேவாலயத்தின் புனரமைப்பிற்கென முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் குறித்த இரு தேவாலயங்களின் புனரமைப்பு பணிகளும் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் கடற்படையினரால் புனர் நிர்மாணம் செய்யப்படவுள்ளது. புனரமைப்பு பணிகளுக்காக முதற்கட்டமாக 10 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை முழுமையான மதிப்பீடு இடம்பெற்றதன் பின்னர் புனரமைப்புக்கு தேவையான முழுமையான நிதி வழங்கப்படுமென தேசிய கொள்கைகள், பொருளாதார விவகாரங்கள், மீள் குடியேற்றம் புனர்வாழ்வளிப்பு, வடமாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.