தற்போது காணப்படும் அசாதாரண சூழ்நிலையில் மக்கள் தமது இயல்பு வாழ்க்கையை இடையூறுகளின்றி தொடர்ந்தும் முன்னெடுத்துச்செல்வது தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வர்த்தக செயற்பாடுகளையும் வழமையான முறையில் நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுமென கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ரஞ்சித் அசோக தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து செயற்பாடுகளை முறையாக முன்னெடுத்து செல்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரவுநேர தபால் ரயில் தவிர்ந்த ஏனைய ரயில்கள் வழமை போன்று சேவையில் ஈடுபடுவதாக ரயில்வே பொது முகாமையாளர் டி.எல்.விக்ரமரத்ன தெரிவித்துள்ளார். ரயில் பயணிகளை பாதுகாப்பதற்கென விசேட வேலைத்திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களிலிருந்து பயணத்தை ஆரம்பிக்கும் சகல ரயிகளின் பெட்டிகளும் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில் நாளாந்த கால அட்டவணைக்கமைய பஸ் போக்குவரத்தை முன்னெடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போதைய நிலை தொடர்பில் பயணிகள், தொழிற்சங்கம் மற்றும் டிப்போ முகாமைத்துவ பணியாளர்கள் உள்ளிட்டோரை தெளிவுப்படுத்துவதற்காக ஆலோசனைகள் அடங்கிய விசேட சுற்றுநிரூபம் மற்றும் சுவரொட்டிகளும் வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.