தம்புள்ள பொருளாதார மத்திய நிலையத்திற்கு 20 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியில் ஏற்பட்ட கைகலப்பில் 25 பேர் காயமடைந்துள்ளனர். இசை நிழச்சிக்கு இடையே ஏற்பட்ட கைகலப்பில் காயமடைந்தவர்கள் தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்து வருகை தந்த அனைவரும் மதுபோதையிலிருந்ததாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.
காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் ஆங்காங்கே மதுபோதையில் இருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் இடம்பெற்ற வளாகத்தில் இன்று அதிகாலை வேளையிலும் நபர்கள் வீழ்ந்து கிடந்ததை காணக்கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இசை நிகழ்ச்சியை கண்டுகளித்து வீடுகளை நோக்கிச் சென்றவர்கள் வீதி சட்டதிட்டங்களை மீறியும் கோஷங்களை எழுப்பியும் மது போதையில் சென்றமையினால் இவர்களுக்கு இடையில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இதேவேளை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துமுள்ளார். தலைக்கவசம் அணியாது மதுபோதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தி அம் மோட்டார் வண்டி லொறியொன்றின் பின்னால் மோதியதை தொடர்ந்து விபத்து ஏற்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.