சிறிய மற்றும் மத்தியதர நெல் ஆலை உரிமையாளர்களுக்கென விசேட அலுவலகமொன்று அநுராதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் ஊடாக சிறிய மற்றும் மத்திய தர நெல் ஆலை உரிமையாளர்களுக்கு நெல்லை கொள்வனவு செய்வதற்கான நிதியை வழங்கும் வேலைத்திட்டமும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கென அரசாங்கத்தினால் ஒரு பில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்ட செயலகங்களின் ஊடாக நிதியை பெற்றுக்கொள்ள முடியுமென நெற் சந்தைப்படுத்தல் சபை தெரிவித்துள்ளது.
இதற்கு இணைவாக நெல் ஆலை உரிமையாளர்கள், விவசாயிகள் மற்றும் நுகர்வோரை பாதுகாக்கும் நோக்கில் குறித்த அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளதாக நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அநுராதநாயக்க தெரிவித்துள்ளார்.
கடந்த சில வருடங்களாக சிறிய மற்றும் நடுத்தர நெல் ஆலை உரிமையாளர்கள் வர்த்தக செயற்பாடுகள் வீழ்ச்சியடைந்து பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டனர். இதற்கமைய தற்போதய அரசாங்கம் அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அவர்களுக்கு நெற்கொள்வனவிற்கான பணத்தை பெற்றுக்கொடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் விவசாயிகளின் நலன்கருதி கொள்வனவின் போது அரசாங்கத்தின் நிர்ணய விலையை பின்பற்றுமாறு அறிவுறுத்தல் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் குறித்த தீர்மானத்தின் ஊடாக அனைவரும் நன்மையடைய முடியுமென நெற் சந்தைப்படுத்தல் சபையின் தலைவர் கஸ்தூரி அநுராதநாயக்க தெரிவித்துள்ளார்.