வில்பத்து தொடர்பில் கண்டறிவதற்கென ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமிக்குமாறு தேசிய கொள்கை மற்றும் பொருளாதார விவகார இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா கோரிக்கை விடுத்துள்ளார். இன்றையதினம் பாராளுமன்ற குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
வில்பத்து விவகாரம் தொடர்பில் கட்டுக்கதைகளை உருவாக்கி அரசியல் லாபம் பெற சில தரப்பினர் முயற்சிப்பதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். சமூக வலைத்தளங்களினூடாக காடழிப்பு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
எனினும் தற்போதைய அரசாங்கத்தினால் எவ்வித காடழிப்புகளும் மேற்கொள்ளப்படவில்லை. இன, பேதங்களை உண்டுபண்ணி அரசியல் லாபம் தேடும் சிலரே இவ்வாறான கட்டுக்கதைகளை உருவாக்குவதாக இராஜாங்க அமைச்சர் நிரோஷன் பெரேரா குறிப்பிட்டார்.
இதேவேளை பாராளுமன்றம் இன்று 9.30க்கு கூடியது. வரவு செலவு திட்டம் மீதான குழுநிலை விவாதத்தின் 11வது நாளான இன்று வெளிவிவகார அமைச்சு, சுற்றுலா அபிவிருத்தி, வனஜீவராசிகள் மற்றும் கிறிஸ்தவ விவகார அமைச்சு மீதான நிதி ஒதுக்கீடுகள் குறித்தான குழுநிலை விவாதம் பாராளுமன்றத்தில் இடம்பெறுகிறது.