நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது பற்றி முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் ஐதேகவுக்கும் மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையில் இன்று பிற்பகல் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பாராளுமன்ற வளாகத்தில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இச்சந்திப்பு இடம்பெற்றது.
இந்த கலந்துரையாடலில் ஐதேக கட்சி சார்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர் மலிக் சமரவிக்ரம ஆகியோர் கலந்து கொண்டனர். மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அக்கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அநுர குமார திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்களான நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் விஜித்த ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையை தொடர்ந்து பா.உ விஜித்த ஹேரத் ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தார்.
“அண்மையில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சியின் சம்மேளன கூட்டத்தில் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான தீர்மானத்தை கொள்கை அளவில் மேற்கொண்டது. இன்றைய சந்திப்பில் பிரதமர் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்க கொள்கையளவில் இணங்குவதாக தெரிவித்தார். அதற்கு ஐக்கிய தேசிய முன்னணியின் இணக்கத்தினை பெற்று கொள்ள வேண்டுமென்றும் அதற்காக அவர்களுடன் கலந்துரையாட வேண்டுமெனவும் கூறினார். அப்பேச்சுவார்த்தையின் பின்னர் விரைவில் தனது நிலைப்பாட்டினை அறிவிப்பதாகவும் அவர் கூறினார். இன்றைய பேச்சுவார்த்தை ஓரளவு வெற்றிப்பெற்றதாகவே நான் கருதுகின்றேன். விரைவில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், மலையகத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் உள்ளிட்ட தமிழ் முஸ்லிம் கட்சிகளுடன் நாங்கள் கலந்துரையாடவுள்ளோம். பாராளுமன்றத்தில் 3 பெரும்பான்மை ஆதரவுடன் இதனை நிறைவேற்றுவதே எமது எதிர்பார்ப்பாகும். “