என்டபிரைஸ் ஸ்ரீலங்கா இலகு கடன் திட்டத்தின் திட்ட யோசனையின் கீழ் கடனைப் பெற்றுக் கொள்வதில் காணப்படும் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேர்தல் தொகுதிகள் தோறும் நடமாடும் வேலைத்திட்டத்தை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வங்கிக் கடனைப் பெற்றுக் கொள்வதற்கு பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்பதாக கிடைக்கப்பெற்ற தகவல்களுக்கு அமைய இந்த நடமாடும் சேவை ஆரம்பிக்கப்பட இருப்பதாக அமைச்சர் மங்கள சமரவீரதெரிவித்துள்ளார். பிணையாளியை இல்லாமல் செய்தல் பல்வேறு ஆவணங்கள் மற்றும் முறையாகப் பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்களால் பயனாளிகள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை இனம் காணுதலும் அதனைத் தீர்ப்பதும் இதன் நோக்கமாகும். இவ்வாறான பிரச்சினைகளை நிவர்த்தி செய்து விரைவாக பொதுமக்களுக்கு கடனை வழங்குவதுஅரசாங்கத்தின் நோக்கமெனவும் அமைச்சர் குறிப்பிட்டார். அதன்படி மாத்தறை மாவட்டத்தின் வெலிகம தேர்தல் தொகுதியில் எதிர்வரும் வாரம் இந்த நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது. இந்த நடமாடும் சேவையில் சகல வங்கி மற்றும் அரச நிறுவனங்களும் இணைத்துக் கொள்ளப்படவுள்ளன. என்டபிரைஸ் ஸ்ரீலங்கா கடன் திட்டம் தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் 1925 என்ற தொலைபேசி இலகத்தின் ஊடாக தொடர்பு கொண்டு தெரிவிக்குமாறு கோரப்பட்டுள்ளது.