படைப்புழு தாக்கத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கும் வேலைத்திட்டம் இன்றையதினம் அம்பாறையில் இடம்பெறுகிறது. அம்பாறை மாவட்ட செயலகத்தில் காலை 10.00 மணிக்கு இது தொடர்பான நிகழ்வு ஆரம்பமானதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. மஹஓய, பதியத்தலாவ, அக்கரைப்பற்று, இறக்காமம், கல்முனை, நாமல்தலாவ, பொத்துவில் மற்றும் மடாதகம ஆகிய பகுதிகளில் முழுமையாக சேதமடைந்த 307 விவசாயிகளுக்கு முதற்கட்டத்தில் நட்டஈடு வழங்கப்படுகிறது. ஒரு ஏக்கர் நிலப்பரப்புக்கு 40 ஆயிரம் ரூபா வீதம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கென 16 மில்லியன் ரூபா நிதியொதுக்கப்பட்டுள்ளது. இதேவேளை எதிர்வரும் இரு வாரங்களில் அனுராதபுரம் மற்றும் மொனராகலை மாவட்டங்களில் படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்டஈடு வழங்கப்படுமென விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. விவசாய காப்புறுதி சபை, விவசாய திணைக்களம், விவசாய அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து திட்டத்தை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.