மணல் அகழ்வு நடவடிக்கைகளை அறிவியல் ரீதியாக முன்னெடுப்பதற்கான ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டுள்ளதாக புவியியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. இயற்கை வளப்பாதுகாப்பு தொடர்பான சர்வதேச நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது. குறித்த நிறுவனத்தின் உதவியுடன் அகழ்வுப் பணிகளை முன்னெடுப்பதே இதன் நோக்கமாகும். இதன் ஊடாக மணல் அகழ்வு நடவடிக்கைகளை, சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளும் முறையின் கீழ் முன்னெடுக்க முடியுமென புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல தெரிவித்துள்ளார். இயற்கை வளப்பாதுகாப்பு தொடர்பான சர்வதேச நிறுவனத்தின் அனுபவங்கள், திறமைகளை பெற்று தரமான முறையில் மணல் அகழ்வு நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இதேவேளை சட்டவிரோத மணல் அகழ்வுகளை கட்டுப்படுத்தும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இயற்கை வள பாதுகாப்பிற்கென எதிர்காலத்தில் மேலும் பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென புவியியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அசேல இத்தவெல தெரிவித்துள்ளார்.