சட்டவிரோதமாக இலங்கையில் இருந்து வெளிநாடு செல்ல முயன்ற 30 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். இவர்கள் தற்போது நாட்டுக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாக கடற்படையின் ஊடக பேச்சாளர் லெப்டினன் கமாண்டர் இசுரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இன்று அதிகாலை இலங்கையின் தெற்கு கடல் பிரதேசத்தில் ரோந்து சேவையில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையின் இரண்டு அதிவேக படகுகளினால் சந்தேகத்திற்கு இடமான படகொன்று அவதானிக்கப்பட்டது. அந்த படகினை சோதனையிட்ட போது இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற 30 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இலங்கையின் தென்பகுதியில் இருந்து 80 கடல் மைல் தொலைவில் வைத்து இந்த படகு அவதானிக்கப்பட்டது. கைது செய்யப்பட்டவர்கள் சட்டவிரோதமாக ரி-யூனியன் தீவுக்கு செல்ல முயன்றிருக்கலாம் என நாங்கள் கருதுகின்றோம். கைது செய்யப்பட்டவர்களை காலி துறைமுகத்திற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.