நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டு தொடர்பாக வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட மூவருக்கு எதிரான வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. வட மாகாணத்தின் கடற்றொழில் மற்றும் போக்குவரத்து அமைச்சராக செயற்பட்ட வி.டெனீஷ்வரனை அப்பதவியில் இருந்து நீக்குவதற்கு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தீர்மானித்தார். இதனை தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடையுத்தரவை செயற்படுத்தவில்லையென குற்றஞ்சாட்டி டெனீஸ்வரன் முன்னாள் முதலமைச்சர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தார். நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டுக்கு அமையவே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இன்று இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிர்வரும் 21ம் திகதி வரை ஒத்திவைப்பதாக நீதிபதி குமுதினி விக்ரமசிங்க அறிவித்தார். விக்னேஸ்வரன் உள்ளிட்ட பிரதிவாதிகள் தாக்கல் செய்த அடிப்படை ஆட்சேபனை இதற்கு முன்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டது.