பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வடக்கிற்கான விஜயத்தை மேற்கொள்ளுகின்றார்.
அங்கு அவர் யாழ்ப்பாணத்தில் பூர்த்தி செய்யப்பட்ட பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை மக்கள் பாவனைக்கு கையளிக்க உள்ளார்.
வலிகாமம் – கோப்பாய் கிழக்கு பிரதேச செயலக அலுவலகத்தின் புதிய கட்டிடம் இன்று முற்பகல் திறந்து வைக்கப்பட உள்ளது. வீடமைப்பு, மீள்குடியேற்ற, அபிவிருத்திப் பணிகளின் முன்னேற்றங்களை ஆராயும் கூட்டம் முற்பகல் 10.00 மணிக்கு பிரதமர் தலைமையில் ஆரம்பமாகும்.
யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் திடீர் விபத்து சிகிச்சைப் பிரிவும் பிரதமர் தலைமையில் திறந்து வைக்கப்பட உள்ளது. அவர் பலாலி விமான நிலையம், காங்கேசன்துறை துறைமுகம் ஆகியவற்றுக்கு விஜயம் செய்து நிலைமைகளை நேரில் கண்காணிப்பார்.
மயிலிட்டி கிராமத்தில் மீளக்குடியேறிய மக்களுக்காக நிர்மாணிக்கப்படும் குடியிருப்புத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் வைபவமும் பிரதமர் தலைமையில் இடம்பெறும். நாளை பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க தலைமையில் பல அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன. கிளிநொச்சி வைத்தியசாலையின் திடீர் விபத்து சிகிச்சைப் பிரிவு, பள்ளிமுனை மீள்குடியேற்றக் கிராமம் ஆகியவற்றுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.
மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களின் முன்னேற்ற பரிசீலனைக் கூட்டங்களிலும் பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்க கலந்து கொள்வார்.