ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் பிலிபைன்ஸ் விஜயத்தின் விசேட அம்சமாக ஐந்து ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிற்கும் பிலிபைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுடேடேர்விற்கும் இடையிலான சந்திப்பு பிலிபைன்ஸ் ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது. இந்த சந்திப்பினை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களின் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.
இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புக்களை அதிகரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதுடன், பிலிபைன்ஸ் அரசாங்கத்தின் சார்பில் அந்நாட்டின் தேசிய பாதுகாப்பு திணைக்களத்தின் செயலாளர் டெல்பின் லொரென்ஸோ கைச்சாத்திட்டதுடன், இலங்கை அரசாங்கத்தின் சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன கைச்சாத்திட்டார்.
சுற்றுலா துறைக்கான ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் பிலிபைன்ஸ் சுற்றுலா திணைக்களத்தின் செயலாளர் பெர்னடேட் ரொமுலோவும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பனவும் கைச்சாத்திட்டனர்.
இதனை தொடர்ந்து விவசாய ஒத்துழைப்பை அதிகரிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
கல்வி துறையை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில் இலங்கை சார்பில் பிலிபைன்ஸூக்கான இலங்கை தூதுவர் திருமதி அருணி ரணராஜாவும் பிலிபைன்ஸ் உயர் கல்வி ஆணைக்குழுவின் பேராசிரியர் பீ.டி வேராவும் கைச்சாத்திட்டனர்.
விவசாய தொழில்நுட்ப ஒத்துழைப்பு தொடர்பான ஒப்பந்தம் ஒன்றும் இதன்போது கைச்சாத்திடப்பட்டது. இவலங்கை விவசாய ஆராய்ச்சி கொள்கை சபையும் பிலிபைன்ஸின் லொஸ் பானோஸ் பல்கலைக்கழகமும் இவ்வொப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.