ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன பிலிப்பைன்ஸுக்கு பயணித்துள்ளார். 5 நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு அவர் பிலிப்பைன்ஸ் சென்றுள்ளார். ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன உள்ளிட்ட தூதுக்குழுவினர் இன்று முற்பகல் 11.10 மணியளவில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக தனது பயணத்தை ஆரம்பித்ததாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்டேயின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அங்கு பயணித்துள்ளார். ஜனாதிபதியின் குறித்த விஜயத்தின்போது இருநாடுகளுக்கிடையிலான அரசியல், பொருளாதாரம் மற்றும் கலாசார உறவுகளை கட்டியெழுப்பும் முக்கியத்துவம் வாய்ந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறவுள்ளன. இலங்கைக்கும், பிலிப்பைன்ஸுக்குமிடையில் கடந்த 1961ம் ஆண்டு முதல் இராஜதந்திர உறவுகள் காணப்படுகின்றன. ஜனாதிபதியின் பிலிப்பைன்ஸ் விஜயம் இரு நாடுகளது உறவை மேலும் பலப்படுத்துமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேவேளை குறித்த விஜயத்தின்போது ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைமையகத்திற்கும் விஜயம் செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.