பாடசாலைகளில் இடம்பெறும் கிரிக்கெட் போட்டிகளின் இறுதியில் மாணவர்கள் நடந்துகொள்ளும் விதமாகவே பாராளுமன்றத்தில் சில உறுப்பினர்கள் சமீபத்தில் செயற்பட்டனர் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கல்வியமைச்சினால் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ என்ற வேலைத் திட்டத்தின் கீழ் கரந்தெனிய மகாவித்தியாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்டுள்ள இரண்டு மாடிக் கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும்
நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பிரதமர் உரையாற்றினார்.
அண்மையில் பாராளுமன்றத்தில் இடம் பெற்ற மோசமான நிகழ்வுகளை நான் குறிப்பிடத் தேவையில்லை. எமது பாராளுமன்றத்திற்கு சிறந்த நற்பெயரும் பாராட்டுதல்கள் இருந்தன.எனினும் தற்பொழுது இவ்வாறு முன்னெடுப்பது என்பதை நானே எனக்குள் கேட்டுக்கொள்கின்றேன். அதேபோன்று மற்றவர்களிடமும் அது பற்றி கேட்கவிரும்புகின்றேன்.
கடந்த இரு மாத காலமாக இளைஞர் யுவதிகள் இது தொடர்பில் இணையத்தளங்களில் வெளியிட்ட தகவல்களை நோக்கும் போது எனக்கு வெட்கமாக இருந்தது. இது போன்றவற்றை தடுப்பதற்கு சில நாடுகளில் முறைமையுள்ளது.
இங்கிலாந்து போன்ற நாடுகளில் நடைமுறையிலுள்ள வேலைத்திட்டங்களை எமது பாராளுமன்றத்திலும் நடைமுறைப் படுத்தி ஒழுக்க கோவை ஒன்றை உருவாக்குவது அவசியமாகும்.
பாராளுமன்றத்தில் ஒழுக்கம் சீர்குலையும் போது அதுதொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு முறைமையொன்று உருவாக்கப்பட வேண்டும். சாதாரண மக்களுக்கு முன்மாதிரியாகும் விதத்தில் பாராளுமன்ற நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என்று பிரதமர் மேலும் தெரிவித்தார்.