மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினையை மனிதாபிமான நெருக்கடியாக பார்க்க வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் உரையாற்றும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மெக்சிகோ எல்லைப்பகுதியில் தடுப்புச்சுவர் அமைக்க 500 கோடி அமெரிக்க டொலர் செலவாகுமென மதிப்பிடப்பட்டுள்ளது. குறித்த நிதியை வழங்குமாறு அமெரிக்க காங்கிரஸ் சபையிடம், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரிக்கை விடுத்துள்ளார். எனினும் மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைக்க நாட்டு மக்களின் வரிப்பணத்தை பயன்படுத்தக்கூடாதென எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது. தடுப்புச்சுவர் திட்டம் கைவிடப்படவேண்டுமெனவும் எதிர்க்கட்சி குறிப்பிட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே மெக்சிகோ எல்லையில் தடுப்புச்சுவர் அமைப்பது தொடர்பில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், பொதுமக்களுக்கு உரையாற்றியுள்ளார்.