இதேவேளை அமைச்சரவை அமைச்சர்கள், பிரதியமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் ஆகியோர் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை வழங்காது இருப்பதற்கான பிரேரணை பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது. குறித்த பிரேரணைக்கு 122 வாக்குகள் கிடைத்ததாக சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். இதேவேளை பாராளுமன்றம் டிசம்பர் மாதம் ஐந்தாம் திகதி காலை 10.30 மணிவரை ஒத்திவைக்கப்படுவதாகவும் சபாநாயகர் சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றம் இன்று முற்பகல் 10.30கு கூடியது. சபாநாயகரின் கண்மூடிதனமான செயற்பாடுகளுக்கு எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் ஆளும் கட்சி இன்றைய தினமும் சபை அமர்வுகளை வெளிநடப்புச் செய்தனர். அமைச்சர்களின் செலவீனங்களுக்காக நிதியொதுக்க கூடாது என்ற மற்றுமொரு யோசனை பாராளுமன்றத்தில் கொண்டுவர எதிர்கட்சி நடவடிக்கை எடுத்தது.
சபாநாயகரின் விசேட அறிவிப்புக்கு பின்னர் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிரான பிரேரணையொன்று எதிர்கட்சியினால் முன்வைக்கப்பட்டது. பொது மக்களின் பணத்தை கொண்டு அமைச்சரவை, இராஜாங்க அமைச்சர் பிரதியமைச்சர் மற்றும் அவர்களின் விடயதானங்களுக்காக எந்தவொரு நிதியும் ஒதுக்கீடு செய்யப்பட கூடாது என்றும் அதற்கு அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு எவ்வித அதிகாரங்களும் இல்லையென்றும் கூறியே இப்பிரேரணை முன்வைக்கப்பட்டது. இப்பிரேரணையை பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரட்ன, ரவி கருணாநாய்க்க, பாட்டலி சம்பிக்க ரணவக்க, அர்ஜூன ரணதுங்க, மனோ கணேஷன், ஜயம்பதி விக்ரமரட்ன ஆகியோரும் இணைந்தே கொண்டுவந்தனர். நம்பிக்கையில்லா பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில் அமைச்சரவை கலைக்கப்பட்டுள்ளது என சபாநாயகரினால் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் நிதி தொடர்பான அனைத்து அதிகாரங்களும் பாராளுமன்றத்திற்கே உள்ளது என இப்பிரேணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.