பாராளுமன்ற சபை நடவடிக்கைகளிலிருந்து ஆளும் கட்சி வெளியேறியுள்ளது. சபாநாயகரின் நடுநிலையற்ற செயற்பாடு காரணமாக சபை நடவடிக்கைகளிலிருந்து வெளியேறுவதாக ஆளும் கட்சி குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றம் இன்று காலை 10.30 மணிக்கு கூடியது. குறித்த சந்தர்ப்பத்தில் பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களை பெயரிடுவது தொடர்பில் இழுபறிநிலை ஏற்பட்டது. சபாநாயகர் பாராளுமன்ற சம்பிரதாயத்தை மீறி பக்கச்சார்பாக செயற்படுவதாக ஆளும் கட்சியினர் குற்றம் சுமத்தினர். பாராளுமன்ற அமர்வு ஆரம்பமானதும் 12 பேர் அடங்கிய தெரிவுக்குழுவுக்கான உறுப்பினர்களின் பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டன. ஆளும்கட்சி சார்பில் அமைச்சர்களான தினேஸ் குணவர்தன, நிமல் சிறிபால டி சில்வா, எஸ்.பீ.திசாநாயக்க, மஹிந்த சமரசிங்க மற்றும் விமல் வீரவங்ச ஆகியோர் சபாநாயகரால் பெயரிடப்பட்டனர்.
எனினும் ஆளும் கட்சியினருக்கு கூடுதலான உறுப்பினர்கள் வழங்கப்படவேண்டுமென சபை முதல்வர், அமைச்சர் தினேஸ் குணவர்தன வலியுறுத்தினார். சபாநாயகர் அரசியல் யாப்பை மீறி செயற்படுவதாகவும் அமைச்சர் தினேஸ் குணவர்தன குற்றம் சுமத்தினார். இதனையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் சபை நடவடிக்கைகளிலிருந்து வெளியேறினர். பின்னர் ஆளும் கட்சியினர் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினர். சபாநாயகர், ரணில் – அனுர – சுமந்திரன் குழுவால் இயக்கப்படுவதாக அமைச்சர் விமல் வீரவங்ச குற்றம் சுமத்தினார். நடுநிலையாக செயற்படவேண்டிய சபாநாயகர், ரணில் – அனுர – சுமந்திரன் குழுவுக்கு ஆதரவாக செயற்படுகின்றார். சபாநாயகர் தற்போதைய அரசாங்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென குறிப்பிட்டுள்ளார். இதனால் ஆளும் கட்சியினர் சபாநாயகரை ஏற்றுக்கொள்ளாமல், பாராளுமன்ற சபை நடவடிக்கைகளிலிந்து வெளியேறியதாக அமைச்சர் விமல் வீரவங்ச குறிப்பிட்டார்
பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.30க்கு..
பாராளுமன்ற அமர்வு இன்று காலை 10.30க்கு இடம்பெறவுள்ளது இதேவேளை பிரதமர் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றி பாராளுமன்ற உறுப்பினர் காஞ்சன விஜேசேகர. இன்று பாராளுமன்றம் கூடுகையில் சபாநாயகர் நிலையியற் கட்டளைகளுக்கு அமைய செயற்பட்டால், அதற்கு ஒத்துழைப்பு வழங்கப் போவதாக தெரிவித்தார். நிலையியற் கட்டளைகளுக்கும் அரசியல் யாப்பிற்கும் புறம்பாகச் செயற்பட்டால் அதற்கு ஆட்சேபம் தெரிவிக்கப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.