சீரற்ற காலநிலை காரணமாக பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை துரித கதியில் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. வட மாகாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக ஆயிரத்து 388 குடும்பங்களை சேர்ந்த 4 ஆயிரத்து 472 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்திலேயே அதிகளவானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு 582 குடும்பங்களை சேர்ந்த ஆயிரத்து 910 பேர் அனர்த்தத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். கிளிநொச்சி, திருவையாறு மற்றும் ஆனந்தபுரம் பகுதிகளிலுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கை கிளிநொச்சி பாதுகாப்பு படைப்பிரிவின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படுகிறது. நிவாரணம் வழங்கும் நடவடிக்கைக்கென விமானப்படையினர் மற்றும் கடற்படையினரின் ஒத்துழைப்பும் பெற்றுக்கொள்ளப்படுமென அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் பெய்த அடை மழை காரணமாக 247 குடும்பங்களை சேர்ந்த 759 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு பொருட்களை வழங்கும் நடவடிக்கையும் இடம்பெறுவதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவிக்கிறது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒருவாரகாலமாக பெய்த தொடர் மழை தற்போது ஓய்ந்துள்ளது. இதனால் தாழ்நில பிரதேசங்களில் தேங்கியுள்ள மழைநீர் தற்போது வழிந்தோடி வருவதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர். மழைநீரை வெளியேற்றுவதற்காக முகத்துவார பகுதிகளில் ஆற்று நீரை கடலுக்கு திறந்துவிடும் நடவடிக்கைகளும் இடம்பெற்றன. கிழக்கு மாகாணத்தில் மாத்திரம் வெள்ள அபாயம் காரணமாக சுமார் இரண்டாயிரம் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அதில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 6 நாட்களாக பெய்த கடும் மழை காரணமாக 14 பிரதேச செயலக பிரிவுகளிலுள்ள ஆயிரத்து 958 குடும்பங்களை சேர்ந்த 6 ஆயிரத்து 571 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வாகரை, கிரான், ஏறாவூர்பற்று, வெள்ளாவெலி, பட்டிப்பளை, வவுனத்தீவு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெள்ள அனர்த்தம் தொடர்பில் ஆராயும் அவசர கூட்டமொன்று நேற்றைய தினம் கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித்த போகொல்லாகம தலைமையில் இடம்பெற்றது. மேலும் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்குமாறு ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.