கொலை செய்யப்பட்ட சவுதி ஊடகவியலாளர் ஜமால் கஷோக்கியின் புதல்வர் சலாஹ்கிற்கு சவுதி மன்னர் சல்மான் மற்றும் முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் தமது அனுதாபங்களை தெரிவித்துள்ளனர். இதற்காக கஷோக்கியின் புதல்வர் சவுதி அரசருக்கும் முடிக்குரிய இளவரசருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். கஷோக்கியின் குடும்ப உறுப்பினர்களுக்கு சவுதி வெளியுறவு துறை அமைச்சர் ஆதல் அல் சுபைர் தனது அனுதாபங்களை தெரிவித்துள்ளார். இதுவொரு மிகப்பெரிய தவறு எனவும் கஸோக்கியின் குடும்ப உறுப்பினர்களின் வலியை தாங்கள் புரிந்து கொள்வதாகவும் சுபைர் தெரிவித்துள்ளார். மிகப்பெரிய துர்திஷ்டவசமான தவறு நடந்துள்ளது. இதற்கு காரணமானவர்கள் பொறுப்பு கூற வேண்டுமென சுபைர் தெரிவித்துள்ளார். துருக்கி ஜனாதிபதி ரிசெப் தையுப் எர்டொகான் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கஷோக்கியின் விடயம் தொடர்பில் கலந்துரையாடியுள்ளதுடன், இவ்விடயம் தெளிவுப்படுத்தப்பட வேண்டுமென்பதில் இருநாட்டு ஜனாதிபதிகளும் இணக்கம் தெரிவித்தனர். இதேவேளை கஷோக்கியின் கொலையை தொடர்ந்து அமெரிக்க திரைசேரி செயலாளர் ஸ்டீவ் நுச்சின் தனது சவுதி அரேபியாவிற்கான விஜயத்தை இரத்து செய்துள்ளார். இதேவேளை ஜமால் கஸோக்கி திருமணம் செய்யவிருந்த பெண்னுக்கு 24 மணிநேர பொலிஸ் பாதுகாப்;பை துருக்கி வழங்கியுள்ளது. இது இவ்வாறு இருக்க ஜேர்மன் சான்சலர் என்ஞலா மேர்கல் சவுதிக்கான ஆயுத ஏற்றுமதியை நிறுத்த போவதாக தெரிவித்துள்ளார். இங்கிலாந்து, பிரான்ஸ், ஜேர்மன் ஆகிய நாடுகள் கஸோக்கியின் கொலையை கண்டித்து கூட்டாக அறிக்கை விடுத்துள்ளன. இக்கொலை தொடர்பில் உடனடியாக விளக்கம் அளிக்கப்பட வேண்டுமென அந்த மூன்று நாடுகளும் கோரிக்கை விடுத்துள்ளன. சவுதி அரேபியா எழுத்தாளரும் தற்போதைய அமெரிக்க பிரஜையும் வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையின் பத்தி எழுத்தாளருமான ஜமால் கஷோக்கி ஒக்டோபர் இரண்டாம் திகதி தனது விவாகரத்து செய்யப்பட்ட மனைவி தொடர்பான ஆவணங்களின் விளக்கங்களை பெற்று கொள்வதற்காக துருக்கியின் ஸ்தான்புல் நகரில் உள்ள துணை தூதரகத்திற்கு பிரவேசித்தார். அதன் பின்னர் அங்கிருந்து மாயமானார். இந்த விடயம் உலக நாடுகள் மத்தியில் பெரும் அல்லோல கல்லோலத்தை ஏற்படுத்தியுள்ளது.