இன்றையதினம் விஜயதசமி தினமாகும். நவராத்திரி விரதம் நேற்றுடன் நிறைவடைந்ததையடுத்து இன்று விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. நவம் என்பது ஒன்பது. சக்திதேவியை 9 நாட்களும் வெவ்வேறு ரூபங்களில் வழிபடும் மக்கள் ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்டு பத்தாம் நாள் அவனை வென்று வெற்றிவாகை சூடிய நாளாக விஜயதசமி கொண்டாடப்படுகின்றது. நவமி அன்று சரஸ்வதி பூஜை ஆயுத பூஜை என்றும் அழைக்கப்படும்.
நவராத்திரி பண்டிகை 9 நாளும் அம்மன் கொலு வைத்து பூஜை செய்து வணங்குவார்கள். ஒன்பது நாட்களும் பூஜை செய்ய இயலாதவர்கள் ஆயுதபூஜை, சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாளில் பூஜை செய்து வணங்குவார்கள். கல்விக்கு அதிபதியான சரஸ்வதி தேவியையும், நம் தொழிலுக்கும் ஜீவனத்திற்கும் உதவி செய்யும் கருவிகளையும் பூஜை செய்து வணங்கும் நாளே சரஸ்வதி பூஜை, ஆயுதபூஜை நாளாகும்.
ஆயுத பூஜை அன்று தாங்கள் செய்யும் தொழிலில் நிபுணத்துவம் பெற்று தங்கள் தொழில் நன்கு விருத்தி அடைவதற்காக தங்கள் தொழிலுக்கு பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள், ஆயுதங்கள், இசை கருவிகள் புத்தகங்கள், பென்சில், பேனா போன்ற பொருட்களை நன்கு சுத்தப்படுத்தி பூஜை செய்வார்கள். இந்த நாளே ஆயுத பூஜை மஹாநவமி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பூஜை நவராத்திரியின் 9ம் நாள் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 10 நாள் விஜயதசமி கொண்டாடப்படுகிறது. இந்த பூஜைகள் செய்வதற்கு ஏற்ற நல்ல நேரங்களை ஜோதிடர்கள் குறித்துள்ளனர். ஒரு சிலர் காலையிலும், சிலர் மாலையிலும் அன்னையை வணங்குவார்கள். அதற்கேற்ப நேரங்கள் குறிக்கப்பட்டுள்ளன.