வரி செலுத்துவதை சமூகத்தின் பொறுப்பாக கருத வேண்டுமேன நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். இலவச சுகாதாரம், கல்வி, சமூர்த்தி, உரமானியம் உள்ளிட்ட சகலதும் மக்களுக்கு வழங்கப்படுவது குறித்த வரியின் மூலமே என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் 2020ம் ஆண்டாகும் போது நேரடி மற்றும் மறைமுக வரிக்கிடையிலான விகிதத்தை குறைப்பதே அரசாங்கத்தின் இலக்கெனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தேசிய வருமான சபை அதிகாரிகள் சங்கத்தின் 51வது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் தற்போது நேரடி மற்றும் மறைமுக வரிகளுக்கிடையிலான விகிதம் 18க்கு 82 என காணப்படுகிறது. இலங்கையில் சாதாரண பொதுமக்களே குறித்த வரிச்சுமையை சுமக்கின்றனர். எமது நூற்றுக்கு 82 வீதமான வருமானம் மறைமுக வரியினூடாகவே கிடைக்கப்பெறுகிறது. இது சாதாரண பொதுமக்களால் செலுத்தப்படுகிறது. ஆனால் வருமானம் அதிகம் பெறுகின்ற, வரி செலுத்தவேண்டியவர்கள் வரியை செலுத்துவதில்லை.
இந்நிலையிலேயே எதிர்வரும் 2020ம் ஆண்டாகும்போது இத்தொகையை 60 – 40 என்ற வீகிதத்தில் மாற்றுவதற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகிறது. இதனை நாம் அடைந்துவிட்டால் அது மிகப்பெரிய வெற்றாக அமையுமெனவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார். இதேவேளை புதிய தேசிய வருமானவரி சட்டமூலத்தில் அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்த அதிகாரங்களில் அதிகளவானவை நீக்கப்பட்டுள்ளன. இதனூடாக தேசிய வருமான திணைக்கள அதிகாரிகளின் பதவிநிலை அதிகாரங்கள் அதிகரித்துள்ளதாகவும் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.