புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் மதிப்பீடு செய்வதற்கு நிபுணர்கள் அடங்கிய குழுவொன்று அமைக்கப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையை தொடர்ந்தும் நடத்துவதா, இல்லை கைவிடுவதா என்பது தொடர்பில் குறித்த குழுவின் பரிந்துரைக்கமைய தீர்மானம் பெறப்படும். எதிர்வரும் சில நாட்களில் குறித்த குழு அமைக்கப்படுமென அமைச்சர் தெரிவித்துள்ளார். புலமைப்பரிசில் பரீட்சையை தேசிய மட்டத்திலான போட்டியாக கருதாமல், எமது பிள்ளைகளின் சிறு பராயத்தை பாதுகாக்கும் வகையில் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுமென அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார். இதேவேளை பரீட்சை நவீனமயமாக்கலின் கீழ் கல்விப்பொதுத்தராதர சாதாரண தர பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை ஆகியவற்றை டிசம்பர் மாதத்தில் நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். கண்டி நகரில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.