ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சீசெல்ஸ் நாட்டின் ஜனாதிபதி டெனி போவின் அழைப்பை ஏற்று அந்நாட்டிற்கு இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சீசெல்ஸ் சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை அந்நாட்டை சென்ற ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சீசெல்ஸின் சிரேஷ்ட பிரதி அமைச்சர்களில் ஒருவரான திருமதி மெக்சுசி மொன்டன் தலைமையிலான குழுவினர் வரவேற்றனர்;. சீசெல்ஸ் நாட்டின் அமைச்சரவை மற்றும் பொதுச் சேவை துறையின் செயலாளர் மொஹமட் ஹபீப் , சீசெல்ஸ் ராஜதந்திர சேவையின் தலைவர், சீசெல்ஸ் நாட்டுக்கான ரஷ்ய தூதுவர் விளாடி மீர் பொலொஸ், இலங்கைக்கான சீசெல்ஸ் உயர்ஸ்தானிகர் கொன்;ராட் மெதடிக், சீசெல்ஸிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் டிக்கிரி ஹேரத் குணதிலக்க ஆகியோரும் விமான நிலையத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர். சுற்றுலா துறை, மீன் பிடி துறை, ஆகிய துறைகளில் வெகுவாக மு:ன்னேற்றமடைந்துள்ள சீசெல்ஸ் நாடானது ஆபிரிக்க வலயத்தில் மிகவும் அபிவிருத்தியடைந்த நாடாகும். இரு நாடுகளுக்கு இடையில் சுகாதாரம், கல்வி, சுற்றுலா, மீன்பிடி, கடல் பாதுகாப்பு தொடர்பில் நிலவும் தொடர்புகளை மேலும அதிகரித்து, இலங்கைக்கு நன்மைகளை பெற்றுக் கொள்வதே ஜனாதிபதியின் இவ்விஜயத்தின் நோக்கமாகும். ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும், சீசெல்ஸ் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது. இச்சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடவுள்ளனர்.