தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை பிள்ளைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் ஒரேயொரு தடை தாண்டல் பரீட்சை என்று பெற்றோர்கள் நம்புகின்ற காரணத்தினால் நாட்டின் சிறுவர் தலைமுறை பெரும் சிரமங்களுக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தாலும் சித்தியடையாவிட்டாலும் தொந்தரவுகளின்றி பிள்ளைகளை அரவணைப்பது எவ்வாறு என்பது பற்றி ஒவ்வொரு வருடமும் புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியாகுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னர் பெற்றோர்களுக்கு அறிவூட்டும் நிகழ்ச்சித் திட்டமொன்றை தயார்படுத்துமாறு அனைத்து அதிபர்களுக்கும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கினார்.
கண்டி முன்மாதிரி பாடசாலையின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் நேற்று (06) முற்பகல் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டார்.
புலமைப்பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளைத் தொடர்ந்து கடந்த காலங்களில் நாட்டின் பிள்ளைகள் பல்வேறு சிரமங்களுக்கு முகங்கொடுத்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி இது பற்றி அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
நேற்றைய தினம் அனுஷ்டிக்கப்பட்ட ஆசிரியர் தினத்தை முன்னிட்டு அனைத்து ஆசிரியர்களுக்கும் வாழ்த்துக்களை தெரிவித்த ஜனாதிபதி ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் உன்னதமான பணியை பாராட்டினார்.
இலவசக் கல்வியின் மூலம் சமூகத்திற்கு பயனுள்ள பிரஜைகளை உருவாக்குவதற்கு ஆசிரியர்கள் மேற்கொண்டுவரும் அர்ப்பணிப்பை பாராட்டிய ஜனாதிபதி ஆசிரியர் தொழிலின் உரிமைகள் சலுகைகளை வெற்றி கொள்வதற்கும் ஆசிரியர்களுக்கு உயர்ந்த கௌரவத்தை பெற்றுக்கொடுக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவித்தார்.
கல்லூரிக்குச் சென்ற ஜனாதிபதியை மாணவர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.
‘அருகிலுள்ள பாடசாலை சிறந்த பாடசாலை’ தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் கல்லூரியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடி விஞ்ஞான ஆய்வுகூட கட்டிடத்தையும் மூன்று மாடி வகுப்பறைக் கட்டிடத்தையும் ஜனாதிபதி மாணவர்களிடம் கையளி்த்தார்.
கல்லூரியின் 2017ஆம் ஆண்டில் விசேட திறமைகளை வெளிக்காட்டிய மாணவர்களுக்கான விருதுகள் மற்றும் பரிசல்களையும் ஜனாதிபதி வழங்கினார்.
கல்லூரியின் முன்மாதிரி பயிர்ச்செய்கை நடவடிக்கைகளையும் ஜனாதிபதி பார்வையிட்டார்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏகநாயக்கஇ கல்லூரியின் அதிபர் ஆர்.எம்.தேசப்பிரிய ரத்நாயக்க உள்ளிட்ட ஆசிரியர் பெற்றோர்இ பழைய மாணவர்கள் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.