அடுத்த வருடத்திற்கான ஒட்டுமொத்த அரச செலவினம் 4 ஆயிரத்து 376 பில்லியன் ரூபாவாகும் என நிதியமைச்சு அறிவித்துள்ளது.
வரவுக்கும் செலவுக்கும் இடையிலான துண்டுவிழும் தொகை 644 பில்லியன் ரூபாவாகும்.
இது மொத்த தேசிய உற்பத்தியில் 4 தசம் 1 சதவீதமாகும் என நிதியமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்த தேசிய உற்பத்திக்கு அமைய, அரச வருமானம் அடுத்த வருடத்தில் 15 தசம் 1 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த வருடத்திற்கான கடன் சேவைக்காக 2 ஆயிரத்து 57 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
இது நாட்டின் வரலாற்றில் ஒரு அரசாங்கம் ஏற்கக்கூடிய மிகப்பெரிய கடன் தொகையாகும்.
இந்தக் கடனில் ஆயிரத்து 271 பில்லியன் ரூபா உள்நாட்டுக் கடனாக செலுத்த வேண்டியுள்ளது.
வெளிநாட்டு கடனாக 786 பில்லியன் ரூபா செலுத்த வேண்டியுள்ளது. அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் செலுத்துவதற்காக சுமார் ஆயிரம் பில்லியன் ரூபா செலவாக உள்ளது. சமுர்த்தி, பாடசாலை சீருடை, இலவச மருத்துவம், வயோதிபர் கொடுப்பனவு, உரமானியம் போன்ற நலன்புரி நடவடிக்கைகளுக்காக அடுத்த வருடத்திற்கென ஒதுக்கப்பட்டுள்ள தொகை 220 பில்லியன் ரூபாவாகும்.
2019ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் இம்மாதம் 9ம் திகதி அமைச்சர் மங்கள சமரவீர பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க உள்ளார்.
வரவு செலவுத் திட்டம் நவம்பர் 5ம் திகதி சமர்ப்பிக்கப்படும்.