அந்நியசெலாவணி கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் இறக்குமதிகள் மட்டுப்படுத்தப்படுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் நிதி அமைச்சர் மங்கள சமரவீரவுடன் கலந்துரையாடி, தேவையான ஆலோசனைகள் வழங்கப்படுமென பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்றுமதிகளை அதிகரித்து 2025 ம் ஆண்டளவில் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார். அமெரிக்க பொருளாதாரம் பலமடைந்துள்ளது. அமெரிக்க கடனுக்கான வட்டி வீதம் அதிகரித்துள்ளது. இதனால் உலக நாடுகளின் கையிருப்புத்தொகை குறைவடைந்துள்ளது. இதுவே இலங்கை ரூபாவின் வீழ்ச்சிக்கும் காரணமாகும்.
அமெரிக்க டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எண்ணெய் விலையும் அதிகரிக்கும். இவ்வாறான பிரச்சினைகளுக்கு உலக நாடுகள் முகங்கொடுத்துள்ளன. இலங்கை பெருமளவு கடன்தொகையை செலுத்தவேண்டியுள்ளதால், மேலதிக பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளது. இவ்வருடம் மூவாயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் கடன்தொகை செலுத்தப்படும். அடுத்த வருடம் நான்காயிரம் மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தப்படவேண்டும். 2009ம் ஆண்டு முதல், 2013ம் ஆண்டு வரை பெறப்பட்ட கடன்தொகையே இவ்வாறு மீள வழங்கப்படுகிறது. இதுவே பொருளாதார சுமை ஏற்பட காரணமாக அமைந்துள்ளது. இந்நிலையில் இறக்குமதியை மட்டுப்படுத்தி, ஏற்றுமதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனூடாக அந்நியசெலாவணி கையிருப்பை தக்கவைத்துக்கொள்ள முடியுமென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
குளியாப்பிட்டிய கட்டுப்பொத்த புதிய பொலிஸ் நிலையத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தற்போது பொலிஸார் சுயாதீனமாக செயற்படுவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார். சனத்தொகை அதிகரிப்பிற்கு ஏற்ப எழும் கேள்விகளை ஆராய்ந்து சட்டம் மற்றும் ஒழுங்கை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய நிறுவனமொன்றும் தேவையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.