தடைசெய்யப்பட்ட பொலித்தீன் தயாரிப்பாளர்களை கண்டறிவதற்கான சுற்றிவளைப்புக்கள் தொடருமென மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. சூழலுக்கு அதிக பாதிப்பை விளைவிக்கக்கூடிய சிலவகையான பொலித்தீன் தயாரிப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் முதலாம் திகதியிலிருந்து தடை உத்தரவு அமுலிலுள்ளது. எனினும் சில வர்த்தகர்கள் கூடுதலான இலாபத்தை பெறும் நோக்குடன் தடைசெய்யப்பட்ட பொலித்தீன் வகைகளை தயாரிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோரை கைதுசெய்யவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. பொலிஸார் மற்றும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையுடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படுமென மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது.