ஊழல் ஒழிப்பு படையணியின் செயல்பாட்டு பணிப்பாளர் நாமல் குமார இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரானார். வாக்கு மூலம் அளிப்பதற்காக வருகை தருமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட அழைப்பிணை தொடர்ந்தே அவர் இவ்வாறு ஆஜரானார்.
ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் சிலரை கொலை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாமல்குமார முறைப்பாடு செய்திருந்தார். பயங்கரவாத ஒழிப்பு பிரிவின் மு:ன்னாள்பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக்க சில்வாவிற்கு இதில் தொடர்பு இருப்பதாக அவர் தனது முறைப்பாடடி;ல் தெரிவித்திருந்தார். இம்முறைப்பாடு தொடர்பில் இடம்பெற்று வரும் விசாரணையின் போது இவரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள ஒலி நாடாவில் அடங்கியுள்ள குரல் தொடர்பிலான விசாரணைக்கு உதவியளிப்பதற்காக நாமல் குமாரவை இன்று ஆஜராகுமாறு அரச பகுப்பாய்வு திணைக்களம் உத்தரவிட்டிருந்தது. இது இவ்வாறு இருக்க பயங்கரவாத ஒழிப்பு பிரிவில் இருந்த 2 தன்னியக்க ஆயுதங்கள், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் பொறுப்பேற்கப்பட்டதாக வெளிவந்த ஊடக தகவல்கள் உண்மையற்றவையென பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு எந்தவொரு தன்னியக்க ஆயுதங்கள் எதனையும் குற்றப்புலனாய்வு திணைக்களம் தனது பொறுப்பில் எடுக்கவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை நாமல் குமார இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜரான போது ஊடகவியலாளர்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்.
குற்றப்புலனாய்வு திணைக்களம் இவ்விடயத்தில் உரிய விசாரணை நடத்தி சிறந்த தீர்ப்பை வழங்குமென நான் நம்புகின்றேன். எனது வீட்டிற்கு இரண்டு பொலிஸ் அதிகாரிகள் காவலில் அமர்த்தப்பட்டுள்ளனர். அதற்காக நான் இலங்கை அரசாங்கத்திற்கும் பொலிஸாருக்கும் இதயபூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன் என குறிப்பிட்டார்.