முழு சுகாதார சேவையையும் உயர்ந்த மட்டத்திற்கு கொண்டுவர தற்போதைய அரசாங்கத்தினால் முடிந்துள்ளது என அமைச்சர் ராஜித சேனாரட்ன தெரிவிக்கின்றார். விசேடமாக இருதய சேவையின் முன்னேற்றத்திற்காக பல்வேறு நடவசடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் இங்கு உரையாற்றுகையில் ;
அன்றிருந்த தாதியர் சேவையை விட மிகவும் உயர்ந்த மட்டத்திற்கு தாதியர் சேவையை கொண்டுவர எம்மால் முடிந்துள்ளது. 2015ஆம் ஆண்டுக்கு பின்னர் பட்டதாரிகளுக்கு என பிரத்தியேகமாக தாதியர் பீடம் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 2020ஆம் ஆண்டளவில் புதிதாக 5 தாதியர் பயிற்சி கல்லூரிகள் ஸ்தாபிக்கப்படும். ஆரம்ப சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும். அடிப்படை சம்பளம் பத்தாயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்பட்சத்தில் மொத்த சம்பளம் 25ஆயிரம் ரூபாவினால் உயர்வடையும். இதைவிட வசதிகள் உடைய பயிற்சி பாடசாலைகள் எதிர்காலத்தில் உருவாக்கப்படும். இவை அனைத்தும் செலவளிக்கப்பட்டதன் மூலம் உங்களிடம் இருந்து சிறந்த சேவையை நாம் எதிர்பார்க்கிறோம்.
பயிலுனர் தாதியர்களுக்கு நியமனங்களை வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். தாதியர் கல்லூரிகளில் பயிற்சிக்கென இணைத்துக்கொள்ளப்பட்ட 1371 பேருக்கு நிமயனக்கடிதங்கள் வழங்கப்பட்டன. நிகழ்வு அலரி மாளிகையில் இடம்பெற்றது. இதேவேளை சுகாதார கனிஷ்ட பிரிவு ஊழியர்களின் தகைமைகளை பூர்த்தி செய்தவர்களுக்கு அரச சுகாதார முகாமைத்துவ சேவைக்கு பதவி உயர்வு வழங்கும் நிகழ்வும் அமைச்சர் ராஜித சேனாரட்ன தலைமையில் இடம்பெற்றது. 387 பேருக்கு இதன்போது பதவி உயர்வு வழங்கப்பட்டது.