இன்றைய சர்வதேச கரையோர சுத்திகரிப்பு தினத்திற்கு இணைவாக ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வைபவம் காலி தெடல்ல கரையோரத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோட்பாட்டிற்கு அமைய தேசிய கரையோரத்தை தூய்மைப்படுத்தி கடல் வளத்தை பாதுகாக்கும் வாரம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. எதிர்வரும் 22 ம் திகதி வரை இடம்பெறும் இவ்வார நிகழ்வுகளில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. 14 மாவட்டங்களில் 100 இடங்களில் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையினால் தூய்மையாக்கும் பணிகள் முன்னெடுக்கப்படும்
சுற்றாடல் பாதுகாப்பு மனிதர்களுக்கு மட்டுமன்றி சகல உயிரினங்களுக்கும் பூமியின் ஸ்த்திர நிலைக்கு அவசியமாகின்றது. எமக்குள்ள சவால்களுள் கரையோர பாதுகாப்பும் சுற்றாடல் பாதுகாப்பும் எம்முன்னுள்ள முக்கிய விடயங்கள் ஆகும். இதனை சகல தரப்பினரும் புரிந்து செயற்படவேண்டும். கரையொரத்தையும் பயன்படுத்தும் அனைவரும் தமது பொறுப்புக்களையும் கடமைகளையும் உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என தெரிவித்தார்.
சகல கரையோரங்களிலுமுள்ள மாவட்டங்களின் அமைச்சுக்கள் திணைக்களங்கள் உள்ளுராட்சி நிறுவனங்கள் மாவட்ட செயலகங்கள் முப்படையினர் பொலிசார் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் பல்கலைக்கழக மற்றும் பாடசாலை மாணவர்களின் பங்களிப்புடன் இவ்வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். கடல் மாசடைவது தொடர்பாக கூடிய கவனத்துடன் செயற்படும் மற்றும் அதனை தடுப்பதற்கு செயற்படும் நாடுகளுள் இலங்கையும் அடங்குகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு இலங்கை ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் தூய்மையாகும் கடல் எனும் வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்டது. இலங்கை பொதுநலவாய அமைப்பின் நாடுகள் வரிசையில் கடல் வள பாதுகாப்பிற்காக அர்ப்பணிக்கும் தலைமைத்துவ நாடாக பிரகடனப்படுத்தப்பட்டது. 2015 ம் ஆண்டுக்கு பின்னர் ஜனாதிபதி தலைமையில் முன்னெடுக்கப்பட்ட திட்டங்கள் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் கடல்வள பாதுகாப்பு தொடர்பாக அதியுயர் முன்னேற்றத்தை எட்டிய நாடாக இலங்கை காணப்படுகிறது. கடந்த ஆண்டு நாட்டைச்சூழ முன்னெடுக்கப்பட்ட கரையோரத்தின் தூய்மைப்படுத்தும் முன்னேற்றக்களுக்கு ஏற்ப இலங்கை 16 வது இடத்திலுள்ளது. தூய்மையான கரையோரத்திற்காக சமுத்திரவியல் பாதுகாப்பு அதிகார சபை, சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆகியன இணைந்து முன்னெடுத்த கரையோரத்தை பாதுகாப்போர் ஜனாதிபதி தலைமையில் நியமிக்கப்பட்டனர். அதி நவீன வசதிகளுடன் கூடிய ஆய்வுகூடம் சமுத்திரவியல் சுற்றாடல் பாதுகாப்பு அதிகார சபையின் தென் மாகாண அலுவலகத் தொகுதி நவீனமயப்படுத்தப்பட்ட தெடல்ல கரையோரம் ஆகியன மக்கள் பாவனைக்காக திறந்து விடப்பட்டது.