தொழில் முனைவோர் ஒரு இலட்சம் பேரை உருவாக்கும் பாரிய வேலைத்திட்டத்தின் கீழான ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ ‘கம்பெரலிய’ தேசிய கண்காட்சி இன்று மொனறாகலையில் ஆரம்பமாகவுள்ளது.
‘மூச்செடுத்த மூன்று ஆண்டுகள் – ஆயிரம் அறுவடை’ என்ற தொனிப்பொருளில் நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் மொனறாகலை மாவட்ட செயலயகப்பிரிவில் இடம்பெறவுள்ள இந்தக் கண்காட்சி இன்று முதல் 31ம் திகதி வரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் 12 வலயங்களாக 515 காட்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
புதிய வர்த்தக முயற்சிக்கான அரசாங்கம் வட்டி செலுத்தும் கடன் முறையின் கீழ் தொழில் முனைவோரை ஊக்குவிப்பதற்கு ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த கண்காட்சியின் மூலம் அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தொழில்வாண்மை கலாசாரத்தை கிராமப்புறங்களுக்குக்கொண்டு செல்லும் நோக்கில் ‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ கடன் திட்டத்தை அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்திருந்தது. கிராமப்புற உட்கட்டமைப்பு அபிவிருத்தியை விரைவுபடுத்தும் நோக்கில் அரசாங்கம் அண்மையில் ஆரம்பித்திருந்த ‘கம்பெரலிய’ திட்டம் தொடர்பிலும் இந்தக் காட்சியில் பொது மக்களுக்கு விரிவான விளக்கம் அளிக்கப்படும்.
நாட்டில் மிகவும் வறுமைக்கு உட்பட்ட மாவட்டம் என்பதால் மொனறாகலையில் இக்கண்காட்சியை ஆரம்பிப்பதற்கு தீர்மானித்ததாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
விவசாய வலயம், அரசாங்க நிறுவனங்கள் வலயம், கல்வி வலயம், பசுமைப் புரட்சி வலயம், நல்லிணக்க வலயம், விளையாட்டு வலயம், வர்த்தக வலயம், ஊடக மற்றும் வெளியீட்டு வலயம் எனப் பல்வேறு வலயங்கள் இந்தக் கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளன. என்டர் பிரைஸ் ஸ்ரீலங்கா திட்டத்தின் ஊடாக சகல துறைகளுக்கு வழங்கப்படும் கடன்வசதிகள் தொடர்பிலும் விரிவான விளக்கமளிக்கப்படவுள்ளன.
இந்தக் கண்காட்சி இடம்பெறும் ஒவ்வொரு நாள் இரவும் நாட்டின் பிரபலமான இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.