பாரியளவிலான நிதி மோசடிகள் மற்றும் ஊழல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மூவர்ங்கிய விசேட மேல் நீதிமன்றத்தின் முதலாவது நீதிமன்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. நீதி அமைச்சர் தலதா அதுகோராள தலைமையில் ஆரம்ப நிகழ்வு நடைபெற்றது. நீதி அமைச்சினூடாக, நீதி சேவைகள் ஆணைக்குழுவிற்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது. இந்த நீதிமன்றின் பொறுப்பு, பிரதம நீதியரசரின் கீழ் வரவுள்ளது.
விசேட மேல் நீதிமன்றங்களை ஏற்படுத்தும் திருத்த சட்டமூலம், மேலதிக வாக்குகளினால் கடந்த மே மாதம் 9ம் திகதி நிறைவேற்றப்பட்டது. அதனை தொடர்ந்து மே 18ம் திகதி சபாநாயகர் இதில் கைச்சாத்திட்டார். இதற்கமைய ஊழல் எதிர்ப்பு மேல்நீதிமன்றின் முதலாம் இலக்க நீதிமன்றம் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. மேல் நீதிமன்ற நீதிபதி சம்பத் அபேகோன், நீதிபதி சம்பத் விஜயரட்ன, நீதிபதி சம்பா ஜானக்கி ராஜரட்ன ஆகியோர் அட ங்கியநீதியரசர்கள் குழு முதலாவது நீதிமன்ற நீதிபதிகளாக பணியாற்றுவார்கள்.
குற்றவியல் தண்டனை சட்டத்தின் கீழ் உள்ள குற்றங்கள் தொடர்பில், இந்த நீதிமன்றினூடாக விசாரிக்கப்படும். இலஞ்ச ஊழல், சட்டவிரோதமான முறையில் நம்பிக்கையை இழக்கச்செய்தல் , நிதி மோசடி, நிதி சுத்திகரிப்பு, பயங்கரவாத நடவடிக்கைகளுக்காக நிதி சேகரித்தல், திட்டமிட்ட குற்றங்கள் மற்றும் பொது உடமைகளுக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட முறைப்பாடுகள் தொடர்பில், இந்த மேல் நீதிமன்றினூடாக விசாரிக்கப்படும். ராஜபக்ஷ ஆட்சியில் தமது குடும்பத்தின் சுக நலனுக்காக, பொது மக்களின் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை தொடர்பில், தற்போதைய விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. மிக் விமானங்கள் கொள்வனவு, டி.ஏ. ராஜபக்ஷ நூதனசாலை மற்றும் அவன்காட் மிதக்கும் ஆயுத களஞ்சியம் ஆகியன தொடர்பில், கோட்டாபய ராஜபக்ஷ மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. திவிநெகும நிதியத்தின் பணத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தி சொத்துகளை குவித்ததாக, முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவிற்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அவரது மனைவியான புஸ்பா ராஜபக்ஷ மீது சீனாவிடமிருந்து நிதி பெற்றுக்கொண்டதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் ஊழியர் செயலணி தலைவர் மற்றும் காப்புறுதி கூட்டுத்தாபபனத்தின் முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் ஆகியோருக்கு எதிராக 4 பில்லியன் ரூபா அரச நிதியை தவறாக பயன்படுத்தியதாக, குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபனத்துடன் இணைந்த நிறுவனமொன்றின் மூலம் நிர்மாணிக்கப்பட்ட கொள்ளுபிட்டி, கிரான் ஹயட் ஹோட்டல் திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட 18.5 பில்லியன் ரூபாவையும் மோசடி செய்ததாக, இவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதியின் ஊழியர் செயலணி தலைவர் காமினி செனரத் மற்றும் இலங்கை காப்புறுதி கூட்டுத்தாபன முன்னாள் முகாமைத்துவ பணிப்பாளர் பியதாச குடாபாலகே ஆகியோருக்கு எதிரான வழக்கு விசேட நீதிமன்றத்தின் முதல் வழக்காக, எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை, குறிப்பிடத்தக்கதாகும். இதன் அடிப்படையில் காமினி செனரத் இலங்கை காப்புறுதி கூட்டுதாபனத்தின் பணிப்பாளர் பியதாச குடாபாலகே, முன்னாள் சமுர்த்தி ஆணையாளர் நீல் பண்டார அப்புஹின்ன, லசந்த பண்டார ஆகியோர் எதிர்வரும் 24ஆம் திகதி மேல் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது. லிட்ரோ லங்கா கேஸ் கம்பனி, கென்வின் ஹோல்டிங்ஸ் கம்பனிக்கு வழங்கிய 500 மில்லியன் ரூபா பணம், ஹெலன்கோ ஹோட்டல் தனியார் கம்பனியில் சட்டவிரோதமாக முதலீடு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பாகவும் அவர்களுக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் இவ்விசேட நீதிமன்றத்தின் ஊடாக உண்மையான ஊழல்வாதிகள் யார் என்பது தெரியவரும்.