அம்பலாங்கொடை மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்று விபத்துக்குள்ளான படகிலிருந்த 11 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கடற்படையும் ஏனைய மீனவர்களும் இணைந்து மேற்கொண்ட தேடுதலில் இவர்கள் மீட்கப்பட்டனர்.
நேற்று காலை 8 மணியளவில் குறித்த படகு அம்பலாங்கொடை மீன் பிடி துறைமுகத்திலிருந்து கடலுக்கு சென்றுள்ளது. இவ்வாறு சென்ற படகு பிற்பகல் 5 மணியளவில் விபத்துக்குள்ளானது. லக்ஷான் எனப்படும் குறித்த படகு, அம்லாங்கொடை மீன்பிடி துறைமுகத்தின் அருகிலேயே இவ்வாறு விபத்துக்குள்ளானது. தெற்கு கடற்படை முகாமை சேர்ந்த அதிகாரிகளும் மீனவர்களும் இணைந்து நேற்று இரவு முதல் இம்மீனவர்களை தேடும் பணிகளில் ஈடுபட்டனர்.
இதனை தொடர்ந்து இன்று காலை 11 மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
பாரிய அலையில் சிக்கி படகு கவிழ்ந்ததாக மீனவர்கள் எனக்கு தகவல் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து 2 கடற்படை படகுகளும் 4 ஆழக்டல் மீன் பிடி படகுகளும் நேற்று இரவு முழுவதும் தேடுதல் பணிகளில் ஈடுபட்டன. ஆனால் அவர்களை கண்டு பிடிக்க முடியவில்லை. இன்று காலை 8 மணியளவில் காலியிலிருந்து சென்ற மீன் பிடி படகொன்றினால் இவர்கள் மீட்கப்பட்டு இவர்கள் கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தற்போது அனைத்து மீனவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டது.