குறிப்பிட்டதொரு பஸ் சங்கம் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்ட போதும், பயணிகள் போக்குவரத்தில் எவ்வித தடைகளும் ஏற்படவில்லையெனவும் வழமை போன்று போக்குவரத்து சேவை இடம்பெறுவதாகவும் எமது பிராந்திய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். போக்குவரத்து விதி மீறல்களுக்கான அபராத தொகை அதிகரிக்கப்பட்டமைக்கு எதிராக இவ்வேலை நிறுத்தம் இடம்பெறுவதாக தனியார் பஸ் சங்கங்கள் தெரிவித்துள்ள நிலையில் கடந்த 6 மாதங்களில் ஆயிரத்து 272 பஸ் விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை இடம்பெறும் இச்சந்தர்ப்பத்தில் வேலை நிறுத்த போராட்டமானது தமது குறுகிய நோக்கங்களை அடைவதற்காகவே இடம்பெறுவதாக மக்கள் குற்றச்சாட்டுக்கின்றனர். ஆனால் தங்களுக்கு எவ்வித தடையும் இன்றி போக்குவரத்தை மேற்கொள்வதற்கு தேவையான பஸ்கள் சேவைகள் ஈடுபடுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
பரீட்சை நடைபெறும் காலத்தில் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது அநீதியானதாகும்.
மாணவர்கள் நன்மை தொடர்பாக சிந்திக்காமல் பஸ்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது தொடர்பில் நாங்கள் கவலையடைகின்றோம்
தனியார் பஸ் சங்கங்களின் பகிஷ்கரிப்பை நாங்கள் முற்றாக எதிர்க்கின்றோம் இது அப்பாவி மக்களை பாதிக்கும் ஒரு செயலாகும் என மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மக்களுக்கு எவ்வித சிரமும் இன்றி பயணம் செய்வதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அச்சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
ஏராளமான தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன என்பதை நிச்சயமாக என்னால் சொல்ல முடியும். பஸ் தரிப்பிடங்களில் எவ்வித சன நெரிசலும் இல்லை. போக்குவரத்து சபை அதிகாரிகள் நாடெங்கும் ஏராளமான பஸ்களை சேவையில் ஈடுபடுத்தியுள்ளனர் என தெரிவித்தார்.
இதேவேளை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் கெமுனு விஜேரத்ன போதியளவு பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தற்போது நாடெங்கும் தனியார் பஸ்கள் சேவையில் ஈடுபட்டுள்ளன. எனது வேண்டுகோளை ஏற்றுக் கொண்டமைக்காக சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். கல்வி பொது தராதர உயர்தர மாணவர்களிளன் பரீட்சைக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் இவர்கள் செயல்படவில்லை. இது பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள ஏனைய பஸ் சங்கங்களுக்கு சிறந்த மு:ன் உதாhணமாகும் என தெரிவித்தார்.
இதேவேளை தனியார் பஸ் சங்கங்களின் பகிஷ்கரிப்பு குறித்து தங்களுக்கு எதுவும் தெரியாதென சில தனியார் பஸ் சாரதிகள் தெரிவித்தனர்.
தனியார் பஸ் சங்கம் ஒன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாக தெரிவித்து தங்களையும் அதில் இணைந்து கொள்ளுமாறு வேண்:டுகோள் விடுத்ததாகவும் ஆனால் அக்கோரிக்கைகளுக்கு மறுப்பு தெரிவித்ததாகவும் முச்சக்கர வண்டிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
எமது முச்சக்கர வண்டிகள் சங்கம் இப்பகிஷ்கரிப்பில் பங்கேற்கவில்லை. போராட்டத்தில் ஈடுபடுவோர் தங்களுக்கான குழியை தாங்களாகவே வெட்டிக் கொள்கின்றனர். இது போராட்டம் நடத்துவதற்குரிய காலம் அல்ல. இது போன்ற தவறான தீர்மானங்களுக்கு ஒருவரும் ஒத்துழைப்பு வழங்க கூடாதென நான் முச்சக்கர வண்டி சாரதிகளை கேட்டுக் கொள்கின்றேன் அகில இலங்கை முச்சக்கர வண்டி சாரதிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை போக்குவரத்து விதி மீறல்களுக்கான தண்டப்பணத்தைஅ திகரிப்பதன் மூலம் விபத்துக்கள் ஏற்படுவதை தவிர்க்க முடியாதென சமூகத்தில் பல்வேறு தரப்பினர் தெரிவித்துள்ளனர். கடந்த வருடம் முதல் 6 மாதத்தில் ஆயிரத்து 222 தனியார் பஸ் விபத்துக்கள் இடம் பெற்றுள்ளன. இவ்வருட முதல் 6 மாதத்தில் அது ஆயிரத்து 272 ஆக அதிகரித்துள்ளதாக பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் இந்திக அப்புகொட தெரிவித்தார்.
தனியார் பஸ் சங்கங்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபடுவது காலோசிதமான செயல் அல்ல. அபராத கட்டணம் அதிகரிக்கப்பட்டமைக்காக தனியார் பஸ் சங்கங்கள் பகிஷ்’கரிப்பில் ஈடுபடவில்லை. அவர்களின் நோக்கத்தை அடைவதற்காகவே இச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொள்கின்றனர். தனியார் பஸ்கள் பயணிகள் அதிகளவில் ஏற்றுவதை நிறுத்தினால்; விபத்துக்கள் ஏற்படாத வகையில் செயல்பட்டால் அவர்களுக்கு அபராதம் செலுத்த வேண்டிய தேவை ஏற்படாது பொலிஸ் போக்குவரத்து பிரிவின் கட்டுப்பாடு மற்றும் வீதி பாதுகாப்பு பிரிவின் பணிப்பாளர் இந்திக அப்புகொட மேலும் தெரிவித்தார்.